‘வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கு ஆனா... இல்லை...’ துறைமுகம் தொகுதியில் ஓட்டுப்போட முடியாததால் திருநங்கைகள் ஏமாற்றம்

‘வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கு ஆனா... இல்லை...’ துறைமுகம் தொகுதியில் ஓட்டுப்போட முடியாததால் திருநங்கைகள் ஏமாற்றம்.

Update: 2021-04-07 04:05 GMT
சென்னை, 

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லறை எஸ்.எம்.நகர் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். திருநங்கைகளும் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலையில் இருந்தே ஓட்டுப்போடுவதற்காக ‘பூத் சிலிப்’களுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர். ஆனால் வாக்குச்சாவடிகளில் பலர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருப்பதாக கூறி அவர்களை வாக்குச்சாவடி அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அந்தவகையில் திருநங்கைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் நேற்று தங்களது வாக்குகளை செலுத்தமுடியவில்லை.

இதுகுறித்து திருநங்கை ரியா என்பவர் கூறுகையில், ‘‘இறுதி வாக்காளர் பட்டியலில் எங்களது பெயர் இடம்பெற்றிருந்தபோதும், வாக்குச்சாவடியில் எங்களது பெயர் நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதனால் எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியாமல் உள்ளோம். எனவே தேர்தல் ஆணையம் எங்களை ஓட்டுப்போட அனுமதிக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை கையாள வேண்டும்’’ என்றார்.

மேலும் செய்திகள்