வீட்டின் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

சுரண்டை அருகே வீட்டின் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-07 19:58 GMT
சுரண்டை, ஏப்:
சுரண்டை அருகே, மனைவி பிரிந்து சென்ற சோகத்தில், வீட்டின் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபர்

தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் மகன் சுரேஷ் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அதே ஊரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (21). இவர்களுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் ஆனது.
திருமணம் ஆனது முதல் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஸ்வரி, கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ராஜேஸ்வரி சென்னைக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. மனைவியை குடும்பம் நடத்த வரும்படி சுரேஷ் வற்புறுத்திய நிலையில் ராஜேஸ்வரி வர முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் தனது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுரேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்