ஊழியர்கள் வேலைநிறுத்தம் கர்நாடகா பஸ்கள் தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை ஓட்டுப்போட வந்தவர்கள் அவதி

ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் கர்நாடகா அரசு பஸ்கள் தமிழ்நாட்டுக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் ஓட்டுப்போட வந்தவர்கள் அவதியடைந்தனர்.

Update: 2021-04-07 20:40 GMT
ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் கர்நாடகா அரசு பஸ்கள் தமிழ்நாட்டுக்கு இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் ஓட்டுப்போட வந்தவர்கள் அவதியடைந்தனர்.
பஸ்கள் இயக்கப்படவில்லை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கோவை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூரு வரை 14 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதுபோல கர்நாடகாவில் இருந்தும் சத்தியமங்கலம் வழியாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு 24 பஸ்கள் இயங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்து எந்த பஸ்களும் நேற்று காலை முதல் தமிழ்நாட்டுக்கு இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது.
கூடுதல் பஸ்கள்
மேலும் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்களும் திரும்பி வரவில்லை. கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் வேலை பார்ப்பவர்கள் சட்டமன்ற தேர்தலையொட்டி ஓட்டு்ப்போடுவதற்காக நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தனர். பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் அவர்கள் நேற்று காலை கர்நாடகா செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இங்கிருந்து கர்நாடகாவுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டன. பகல் 11 மணிக்கு பிறகு 10 பஸ்கள் மைசூர், பெங்களூரு வரை இயக்கப்பட்டன. அதன்பின்னரே நிலமை சீராகியது.

மேலும் செய்திகள்