25 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
கூடலூர் அருகே 25 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டிரைவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
கூடலூர்
கூடலூர் அருகே 25 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் டிரைவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
25 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
கூடலூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் கேரளா உள்பட வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் தேவாலா தனியார் தேயிலை தொழிற்சாலையில் இருந்து தேயிலைத்தூள் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நாடுகாணி வழியாக கேரளாவுக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.
லாரியை அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 56) என்பவர் ஓட்டினார். அப்போது தமிழக- கேரள எல்லையான கீழ்நாடுகாணி பகுதியில் லாரி சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
தொடர்ந்து சாலையோரம் உள்ள சுமார் 25 அடி பள்ளத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதைக்கண்ட சக வாகன டிரைவர்கள் லாரி டிரைவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் லாரி டிரைவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
படுகாயத்துடன் டிரைவர் மீட்பு
இதனால் அவர் லாரிக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என கருதப்பட்டது. இதைத்தொடர்ந்து தேவாலா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவரை காணவில்லை. தொடர்ந்து நேற்று காலை போலீசார் மீண்டும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது விபத்து நடந்த இடத்தில் லாரிக்கு அருகே ஒரு புதருக்குள் டிரைவர் மூர்த்தி படுகாயத்துடன் சிக்கி இருந்தது தெரியவந்தது.
பின்னர் அவரை போலீசார் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கேரளா கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து விபத்து நடந்த லாரியில் இருந்த தேயிலை தூள் மூட்டைகளை தொழிலாளர்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர். பின்னர் பள்ளத்தில் கிடந்த லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த விபத்து குறித்து தேவாலா போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.