ிஷம் கலக்கப்பட்ட குட்டையில் தண்ணீர் குடித்த 16 ஆடுகள் சாவு விவசாயி மயக்கம்

வீரபாண்டி அருகே, விஷம் கலக்கப்பட்ட குட்டையில் தண்ணீர் குடித்த 16 ஆடுகள் செத்தன. விவசாயி மயக்கம் அடைந்தார்.

Update: 2021-04-08 14:31 GMT

உப்புக்கோட்டை:
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கோட்டூர் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் பாஸ்டின் துரை (வயது 28). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 50). இருவரும் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். 
இவர்கள் நேற்று முன்தினம் தர்மாபுரி அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் அருகில் இருந்த குட்டையில் ஆடுகளை தண்ணீர் குடிக்க விட்டனர். இந்தநிலையில் தண்ணீர் குடித்த 10 நிமிடத்திலேயே பாஸ்டின் துரையின் 10 ஆடுகள் மற்றும் ஆரோக்கியசாமியின் 6 ஆடுகள் என 16 ஆடுகள் வாயில் நுரை தள்ளி பரிதாபமாக இறந்து போனது. மேலும் தாகத்திற்காக அந்த குட்டையில் தண்ணீர் குடித்த பாஸ்டின் துரையும் மயங்கி விழுந்தார். 
போலீசார் விசாரணை
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் மயக்கம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
இதனிடையே குட்டையில் விஷம் கலந்தது யார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----

மேலும் செய்திகள்