கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Update: 2021-04-15 16:19 GMT
தேனி: 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை சரிவர பெய்யாததால் அருவிக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதியில் பரவலாக பெய்த கனமழையால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர். 

இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் அருவியை பார்க்க மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். 

மேலும் அருவியில் நீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்