சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பலி

புன்னம்சத்திரம் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கல்லூரி உதவி பேராசிரியர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-04-15 17:42 GMT
நொய்யல்
கல்லூரி உதவி பேராசிரியர்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி சவுதாபுரத்தை சேர்ந்தவர் சந்தானம் (வயது 37). இவரது மனைவி ஜெயபாரதி (36). இவர்கள் இருவரும் புன்னம்சத்திரம் அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு சுஜா (5) என்ற மகள் உள்ளார்.    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி சந்தானம் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் புன்னம் சத்திரத்தில் இருந்து வேலம்பாடி சவுதாபுரத்திற்கு சீட்டு பணம் கொடுப்பதற்காக பவுத்திரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சந்தானம் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
பலி
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சந்தானத்தை மீ்ட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 
இந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி சந்தானம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சந்தானத்தின் மனைவி ஜெயபாரதி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்