நடிகை ராதாவை 2-வது திருமணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
நடிகை ராதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டு விருகம்பாக்கத்தில் உள்ள ராதா வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
பூந்தமல்லி,
சென்னை ஆர்.ஏ.புரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் வசந்தராஜா(வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர், தற்போது எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர், ‘சுந்தரா டிராவல்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகை ராதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டு விருகம்பாக்கத்தில் உள்ள ராதா வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இதற்கிடையில் தன்னை 2-வது கணவர் அடித்து துன்புறுத்துவதாக கூறி விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை ராதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். பின்னர் இருவரும் சமரசமாக செல்வதாக கூறி அந்த புகாரை வாபஸ் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நடிகை ராதா அளித்த புகாரின் உண்மை தன்மை குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். அதில் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், முதல் மனைவிக்கு தெரியாமல் நடிகை ராதாவை ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்டது உறுதியானது.
இதையடுத்து அரசு பணியில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதால் வசந்தராஜாவை பணியிடை நீக்கம் செய்து தெற்கு மண்டல இணை கமிஷனர் லட்சுமி உத்தரவிட்டார்.