104 டிகிரி வெயில் கொளுத்தியது

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்த்தனர்.

Update: 2021-04-19 20:29 GMT
பெரம்பலூர்:

கொளுத்தும் வெயில்
பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 2 நாட்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் வெயில் அளவு 102.2 டிகிரி செல்சியஸ் என பதிவானது. ஆனால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.
இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்தனர். பலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்பவர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சென்று வருகின்றனர்.
சிரமப்படும் பொதுமக்கள்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், தாகத்தை தீர்க்கவும் பொதுமக்கள் பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர், முலாம் பழச்சாறு, மோர், கூழ் போன்றவற்றை கடைகளில் வாங்கி பருகுகின்றனர். நுங்கு, தர்பூசணி போன்றவற்றையும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
தற்போது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்கவே பொதுமக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் அடுத்த மாதம்(மே) 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. கத்தரி வெயிலை எப்படி சமாளிப்பது என்று பொதுமக்கள் தற்போதே புலம்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்