மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் மாணவர் சாவு

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-04-19 20:29 GMT
பெரம்பலூர்:

மோட்டார் சைக்கிளில் சென்றனர்
பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகர், சித்தர் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருடைய மகன் கிருஷ்ணகாந்த்(வயது 16). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் வெங்கடேசபிரசாத்தும் (21) நேற்று முன்தினம் மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே சென்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கிருஷ்ணகாந்தும், வெங்கடேசபிரசாத்தும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சாவு
பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிருஷ்ணகாந்த் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெங்கடபிரசாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்