ஜெபம் செய்வதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார்

பாதிரியார் ஸ்காட் டேவிட், ஜெபம் செய்வதாக கூறி ஏஞ்சலினிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

Update: 2021-04-20 01:59 GMT
ஆவடி, 

ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்தவர் ஏஞ்சலின் (வயது 42). குடும்ப பிரச்சினை காரணமாக இவர், மன அழுத்தத்தில் இருந்து வந்தார். ஜெபம் செய்தால் சரியாகிவிடும் என்று உறவினர் ஒருவர் அவரை ஆவடியை அடுத்த மோரை நியூ காலனி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கிருந்த பாதிரியார் ஸ்காட் டேவிட் (53) ஏஞ்சலினுக்கு ஜெபம் செய்தார்.

அதன்பிறகு மீண்டும் ஜெபம் செய்வதற்கு தேவாலயத்துக்கு தனியாக வருமாறு ஏஞ்சலினிடம் பாதிரியார் கூறியதாக தெரிகிறது. அதை நம்பி அவரும் தேவாலயத்துக்கு தனியாக ஜெபம் செய்ய சென்றார்.

அப்போது பாதிரியார் ஸ்காட் டேவிட், ஜெபம் செய்வதாக கூறி ஏஞ்சலினிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஏஞ்சலின் அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை பாதிரியார் ஸ்காட் டேவிட்டை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்