தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து வனத்துறை ஊழியர் பலி

தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து வனத்துறை ஊழியர் பலியானார்.

Update: 2021-04-30 21:15 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து வனத்துறை ஊழியர் பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
வனத்துறை ஊழியர்
விழுப்புரம் மாவட்டம் அரச்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 31). இவர் ஈரோடு வனத்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.  இவருடைய மனைவி இந்துமதி. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
நேற்று அரச்சலூரில் இருந்து ஈரோடு நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சரண்ராஜ் சென்று கொண்டிருந்தார்.
டயர் வெடித்து பலி
சேலம் மாவட்டம் தலைவாசல் அரசு ஆட்டுப்பண்ணை அருகில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் அவரது மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தது.
அப்போது மோட்டார் சைக்கிள் முன்பக்க டயர் வெடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 6.30 மணியளவில் சரண்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்