தொழிலதிபரின் கார் தீவைத்து எரிக்கப்பட்டது

மூலனூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த தொழிலதிபரின் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2021-05-01 17:39 GMT
மூலனூர்
மூலனூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த தொழிலதிபரின் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். 
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தொழிலதிபர் 
திருப்பூர் மாவட்டம் மூலனூரை அடுத்த அனுப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் சென்னையில் எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் இருந்து வருகிறார் இவருக்கு தேவி என்ற மனைவியும், பிரதீப் ராம் என்ற மகனும் உள்ளனர்.இவர்  நேற்று முன்தினம் இரவு தனது காரை வீட்டின் முன்பு வழக்கம் போல் நிறுத்தி விட்டு வீட்டில் தூங்க சென்று விட்டார். 
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு  கார்  நிறுத்தப்பட்டு இருந்த பகுதியில் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு  எழுந்த ரவிச்சந்திரன் கதவை திறந்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் கூச்சல் போட்டார். இவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து   தீயை அணைத்தனர். 
போலீசார் விசாரணை
பின்னர்  இந்த சம்பவம் குறித்து மூலனூர் போலீஸ் நிலையத்திற்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவம் நடந்த வீட்டிற்கு தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மற்றும் போலீசார்  வந்து விசாரணை நடத்தினர். மேலும்  தடய அறிவியல் நிபுணர்கள்  வந்து ஏதேனும் கை ரேகைகள் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். 
இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவிச்சந்திரன் காருக்கு தீவைத்த ஆசாமிகள் யார்? தொழில் போட்டி காரணமாக தீ வைத்தார்களா? அல்லது முன்விரோதம் காரணமா? என்று   விசாரித்து வருகிறார்கள்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்