அளவுக்கு அதிகமாக மண் ஏற்றி சென்ற லாரி சிறை பிடிப்பு

மடத்துக்குளம் அருகே அளவுக்கு அதிகமாக மண் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

Update: 2021-05-01 18:46 GMT
மடத்துக்குளம்
மடத்துக்குளம் அருகே அளவுக்கு அதிகமாக மண் ஏற்றி சென்ற லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.  
லாரி சிறை பிடிப்பு 
 துங்காவி- மடத்துக்குளம் சாலையில் அளவுக்கு அதிகமாக கிராவல் மண் ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை, பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
இதனால் லாரி ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
சிறிது நேரம் கழித்து, தண்ணீர் லாரி வரவழைக்கப்பட்டு, தூசு பறக்காமல் இருக்க, தண்ணீர் தெளிக்கப்பட்டது. 
இதனையடுத்து பொதுமக்கள் சமரசம் ஏற்பட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து துங்காவி ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறியதாவது
விவசாய நிலம்
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களில் கடந்த காலங்களில் 3 போகம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. 
ஆனால் காலப்போக்கில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விளைநிலங்கள் அனைத்தும் தரிசு நிலமாக மாறியது. 
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தரிசு நிலங்களில் உள்ள கிராவல் மண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு, நில உரிமையாளரிடம் பேசி அள்ளி செல்கின்றன. 
மேலும் மண் அள்ளுவதற்கு முறையான அனுமதி பெற்றார்களா? என்று தெரியவில்லை.  
மேலும் துங்காவி மற்றும் ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தினந்தோறும் 300 முதல் 500 லாரிகள் கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். விதிமுறைப்படி கிராவல் மண் 3 அடி ஆழம் மட்டுமே தோண்டப்பட வேண்டும். 
ஆனால் ஜோத்தம்பட்டி மற்றும் துங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 10 அடிக்கும் அதிகமான ஆழம் கிராவல் மண் அள்ளப்பட்டுள்ளது. 
நடவடிக்கை எடுக்க வேண்டும்
 எனவே துங்காவி, மெட்ராத்தி, ஜோத்தம்பட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில்  அனுமதியின்றி கடத்தப்பட்டு வரும் கிராவல் மண் குறித்து  தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கள ஆய்வு செய்து, அளவுக்கு அதிகமான மண்ணை எடுப்பதை நிறுத்த வேண்டும். 
மேலும் இப்பகுதியில் கிராவல் மண் எடுப்பதற்கு உரிய முறையான அனுமதி பெற்று உள்ளார்களா? என ஆய்வு செய்ய வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்