சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடவில்லை
சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடவில்லை.
சேலம்:
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதில் இளம் வயதினரும் பாதிக்கப்படுவதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்கள் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் அவர்களுக்கு நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து போதிய அளவில் கையிருப்பு இல்லாததால் இந்த திட்டத்தை தற்போது செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்திலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாருக்கும் நேற்று கொரோனா தடுப்பூசி போடவில்லை. தமிழக அரசு அறிவித்த பின்னர் தான் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.