சிப்பிகள் கரை ஒதுங்கிக் கிடக்கின்றன

உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரையில் அதிக அளவில் சிப்பிகள் கரை ஒதுங்கிக் கிடக்கின்றன

Update: 2021-05-03 19:21 GMT
பனைக்குளம்
உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரையில் அதிக அளவில் சிப்பிகள்  கரை ஒதுங்கிக் கிடக்கின்றன.
தடை
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் டால்பின், ஆமை, கடல் குதிரை, கடல்பசு உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதைதவிர பலவகை சிப்பிகளும் மற்றும் பவளப் பாறைகளும் உள்ளிட்டவைகளும் இயற்கையாகவே கடலில் அதிக அளவில் உள்ளன.
அதுபோல் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருவதன் எதிரொலியாக கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா இடங்களுக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல அரசால் தடைவிதிக்கப்பட்டது.
அரியமான் கடற்கரை
இந்தநிலையில் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரியமான் கடற்கரை கடந்த மாதம் 20-ம் தேதி முதலே சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகின்றன. 
சுற்றுலா பயணிகள் யாரும் அரியமான் கடற்கரைப்பகுதிக்கு கடந்த 2 வாரத்துக்கு மேலாக செல்லாததால் கடல் அலை மற்றும் நீரோட்டத்தின் வேகத்தால் கடலில் இருந்து ஏராளமான சிப்பிகளும், சங்குகளும் கரை ஒதுங்கிக் கிடக்கின்றன. 
பரவி கிடக்கின்றன
அதிலும் குறிப்பாக கோபுர சிப்பி, தட்டு சிப்பி, வரி சிப்பி மற்றும் சிறிய வகை சங்குகளும் அதிக அளவில் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு வராததால் அவை அனைத்தும் கடற்கரை மணல் பரப்பில் கரை ஒதுங்கிய நிலையில் கடற்கரை முழுவதும் பரவி கிடக்கின்றன. 
வழக்கமாக இதுபோன்று கரை ஒதுங்கிக் கிடக்கும் சிப்பி மற்றும் சங்குகளை அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எடுத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்