நடிகர் சத்யராஜ் பங்களாவை முற்றுகையிட்ட 13 காட்டு யானைகள்
நடிகர் சத்யராஜ் பங்களாவை முற்றுகையிட்ட 13 காட்டு யானைகள்
இடிகரை
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே ஆனைக்கட்டி, பாலமலை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றனர்.
அவை, தீவனம் மற்றும் குடிநீர் தேடி அவ்வப்போது மலையடிவார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன.
இதனால் மனித விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது கூட நிகழ்கிறது. அதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது கோடைகாலம் என்பதால் பாலமலை யில் தீவனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது.
முற்றுகையிட்டு நின்றன
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் 4 குட்டிகள் உள்பட 13 காட்டு யானைகள் குடிநீர் தேடி மலையை விட்டு இறங்கின.
அவை, பெரிய நாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையத்தில் உள்ள நடிகர் சத்யராஜிக்கு சொந்தமான பங்களாவின் சுற்றுச்சுவர் அருகே முற்றுகையிட்டு கூடி நின்றன.
பின்னர் காட்டு யானைகள் குடிநீர் தேடி அங்குமிங்கும் அலைந்தன. அப்போது தோட்டங்களுக்கு பாய்ச்சப்படும் குழாயில் தண்ணீர் வந்தது. அதில் ஒவ்வொரு யானையாக தண்ணீர் குடித்து தாகம் தணித்தன. யானைகள் யாருக்கும் எந்தத் தொந்தரவும் தர வில்லை.
ஆனால் காட்டு யானைகள் கூட்டமாக பங்களாவின் அருகே சுற்றியது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கோடை மழை போதிய அளவு பெய்யாத நிலையில் வனப்பகுதி வறண்டு காணப்படுகிறது.
இதன் காரணமாக யானைகள் ஊருக்குள் வரத்தொடங்கி விட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.