பூக்கள் விலை கடும் சரிவு

கீரமங்கலம் பகுதியில் பூக்களின் விலை கடும் சரிவைசந்தித்துள்ளது.

Update: 2021-05-04 17:20 GMT
கீரமங்கலம், மே.5-
கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக கீரமங்கலம் பகுதியில் பூக்களின் விலை கடும் சரிவைசந்தித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பூக்கள் உற்பத்தி
கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், அணவயல், மாங்காடு, வடகாடு, பனங்குளம், குளமங்கலம், பாண்டிக்குடி, பெரியாளூர், நெய்வத்தளி, மேற்பனைக்காடு மற்றும் மழையூர், சம்மட்டிவிடுதி, வம்பன், திருவரங்குளம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூந்தோட்டம் அமைத்து விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லி, ரோஜா, அரளி, சம்பங்கி, சென்டி, பிச்சி உள்பட அனைத்து வகை பூக்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.
விற்பனை சரிவு
கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலத்தில் உள்ள கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் வெளியூர்களில் இருந்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 10 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வருகிறது.
ஆனால் தற்போது கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பூக்களின் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. நேற்று பூக்களின் விலை மல்லிகை, கனகாம்பரம் கிலோ ரூ.80-க்கும், முல்லைப்பூ, அரளி கிலோ ரூ.50, சம்பங்கி கிலோ ரூ.10-க்கும் செண்டிப்பூ கிலோ ரூ.5-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  
விவசாயிகள் கவலை
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, பல நாட்களாக விலை குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பூக்கள் உற்பத்திக்காக கடன் வாங்கி செலவு செய்துள்ளோம். ஆனால் ஊரடங்கால் அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் விலை மிகவும் குறைந்து உற்பத்தி செலவுக்கு மட்டுமின்றி பூக்கள் பறிக்கும் கூலிக்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை. அதனால் மலர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
தர்பூசணி விற்பனையும் சரிவு
வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தர்பூசணி சாகுடி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக தர்பூசணி விற்பனையும் சரிவை சந்தித்துள்ளது. வெயில்காலம் தொடங்கி உள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்ப்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்