குவிந்து கிடக்கும் முழுகவச ஆடைகள்

திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் குவிந்து கிடக்கும் முழுகவச ஆடைகள் மற்றும் முககவசங்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-05-04 17:29 GMT
திருப்பூர்
திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் குவிந்து கிடக்கும் முழுகவச ஆடைகள் மற்றும் முககவசங்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குவிந்து கிடக்கும் முழுகவச ஆடைகள்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான பல்லடம் ரோட்டில் உள்ள எல்.ஆர்.ஜி. மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு கடந்த 2-ந்தேதி எண்ணப்பட்டன. இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், 3 ஆயிரம் பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டதால் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகிறவர்களுக்கு முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இதுபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுகவச ஆடைகளும் சிலருக்கு வழங்கப்பட்டன. இதுபோல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சிலரும் முழுகவச ஆடைகள் அணிந்திருந்தனர்.
தொற்று பரவும் அபாயம்
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்படாமல் இருக்கிறது. முழுகவச ஆடைகள் மற்றும் முககவசங்கள் பலரும் அணிந்துவிட்டு ஆங்காங்கே வீசிச்சென்று விட்டனர். இவை இன்னமும் அகற்றப்படாமல் இருந்து வருகிறது.
இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்