ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் அமைந்துள்ள சேதுபதி நகரில் குடியிருந்து வருபவர் சக்திவேல் (வயது 48). இவர் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான திருப்பாலைக்குடிக்கு சென்றிருந்தார். நேற்று காலை ஊரில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த தகவல் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.