சமூக இடைவெளி கடைபிடிக்காத வங்கி, கடைகளுக்கு அபராதம்

சமூக இடைவெளி கடைபிடிக்காத வங்கி, கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-06 19:59 GMT
கடையநல்லூர்:

தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின்பேரில், கடையநல்லூரில் நகரசபை ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில், சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, போலீசார் உள்ளிட்ட குழுவினர் நேற்று நகர் முழுவதும் ஆய்வு நடத்தினர். 

அப்போது கடையநல்லூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்களை அதிகாரிகள் வெளியேறுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து அந்த கடை பூட்டப்பட்டது. இதுதொடர்பாக கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் சில கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியதாக கடைக்காரர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.  

இதேபோல் கீழப்பாவூரில் நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர், சுகாதார பணியாளர்கள், போலீசார் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வங்கியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமலும் வாடிக்கையாளர்கள் இருந்தனர். இதையடுத்து அந்த வங்கி கிளைக்கு நகர பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்