தனியார் நிறுவன என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ். குறித்து மனைவி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தனியார் நிறுவன என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிணத்துக்கடவு
செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ். குறித்து மனைவி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தனியார் நிறுவன என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவன என்ஜினீயர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 36). இவருடைய மனைவி ரம்யா (30). இவர்களுக்கு 3½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
முனிராஜ் தற்போது கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செம்மொழி கதிர்நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.
எஸ்.எம்.எஸ். வந்தது
இந்த நிலையில் முனிராஜ் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) வந்தது. அதை பார்த்த ரம்யா, தனது கணவரிடம் கேட்டார். அதற்கு அவர் இது தன்னுடன் வேலை செய்யும் நபர் என்று கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த ரம்யா, எஸ்.எம்.எஸ். வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது மறுமுனையில் ஒரு பெண் குரல் கேட்டது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ரம்யா, அந்த பெண் யார் என்று கணவரிடம் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
தூக்கில் தொங்கினார்
பின்னர் 2 பேரும் தனித்தனி அறையில் தூங்க சென்றனர். காலை நீண்ட நேரம் ஆகியும் முனிராஜ் படுத்து இருந்த அறையின் கதவு திறக்கவில்லை. ரம்யா, அந்த அறையின் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த அறையின் கதவை திறந்தபோது, அங்கு தூக்கில் முனிராஜ் தொங்கி கொண்டு இருந்தார்.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், முனிராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முனிராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.