பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் சிக்கினான்

கருங்கல் அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2021-05-10 20:21 GMT
கருங்கல், 
கருங்கல் அருகே பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 
நகை பறிப்பு
கருங்கல் அருகே கப்பியறை நகரப்பொற்றைவிளை பகுதியைச் சேர்ந்த நெல்சன் என்பவரது மகள் நிஷா (வயது 24). சம்பவத்தன்று இவர், வாத்தியார் கோணம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ஸ்கூட்டர் ஓட்டி பழகிக்கொண்டிருந்தார்.
 அப்போது, அங்கு வந்த கப்பியறை மருதங்கோடு பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவரது மகன் ஜெகன் (31), திடீரென நிஷாவின் கழுத்தில் கிடந்த 2¼ பவுன் சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பியோடினார்.
மடக்கி பிடித்தனர்
 இதனால், அதிர்ச்சி அடைந்த நிஷா திருடன்... திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஜெகனை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து அவரிடம் இருந்து நிஷாவின் 2¼ பவுன் சங்கிலிைய மீட்டனர். 
பின்னர், இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜெகனை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெகன் மோட்டார் சைக்கிளில் சென்று சங்கிலி பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதும், ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெகன், கடந்த நவம்பர் மாதம் தான் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்