100 படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை மையம்

திருப்பத்தூரில் உள்ள சுவிடிஸ் மிஷின் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 100 படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.

Update: 2021-05-11 18:02 GMT
சிவகங்கை, 
திருப்பத்தூரில் உள்ள சுவிடிஸ் மிஷின் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 100 படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
ஆய்வு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சுவிடிஸ் மிஷின் மருத்துவ மனையில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த மருத்துவர்களிடம் சிகிச்சைகளின் தன்மை குறித்தும், மேலும் சிகிச்சை பெற்று வருபவர் களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
திருப்பத்தூரில் உள்ள சுவிடிஸ் மிஷின் மருத்துவமனையில் ஆண்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு 50 படுக்கை வசதிகளும், பெண்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு 50 படுக்கை வசதிகளும் என 100 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுஉள்ளது. 
இந்த மையத்தில் சித்தா மருத்துவ சிகிச்சையும் மற்றும் அலோபதி மருத்துவ சிகிச்சையும் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சிகிச்சை வழங்கும் வகையில் 2 வகையான சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. தற்போது சிகிச்சை மையத்தில் முழு எண்ணிக்கையும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
சுழற்சி முறை
மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்வதுடன் செவிலியர்களும் போதிய அளவு எண்ணிக்கையில் பணியாற்றி வருகிறார்கள். சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போதி அளவு இருப்பில் உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு கபசுரக்குடி நீர் வழங்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களின் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் கபசுரக்குடிநீர்; வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது தேவகோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயந்தி ஆகிேயார் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்