சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை
சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் தகவல்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல ஒருங்கிணைப்பு குழு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலரும், வணிக வரித்துறை முதன்மைச் செயலாளருமான எம்.ஏ.சித்திக் மற்றும் முதன்மைச் செயலாளரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் பேசியதாவது:-
சென்னையில் 15 மண்டலங்களுக்கும் களப்பணிகளை ஒருங்கிணைக்க இந்திய ஆட்சிப்பணி அளவிலான அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளதால், அனைத்து கொரோனா பாதுகாப்பு மையங்களும் படிப்படியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை ஆரம்ப நிலை சுகாதார மையமாக மாற்றநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.