பொதட்டூர்பேட்டை அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பொதட்டூர்பேட்டை அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-26 03:50 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கீளப்பூடி காலனியை சேர்ந்தவர் பெரியப்பன் (வயது 55). இவரது மகன்கள் முருகைய்யன் (30), வேலு (25). இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களில் வேலு அதே கிராமத்தை சேர்ந்த ரோஜா (22) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரோகித் (7) என்ற மகனும் இலக்கியா (5) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் வேலு தனது மனைவி ரோஜாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவதாக தெரிகிறது.

2 வாரங்களுக்கு முன்னால் ஏற்பட்ட தகராறில் ரோஜா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வேலு மனவேதனை அடைந்தார். தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதாக கூறி வேலு மாமியார் வீட்டுக்கு சென்றார்.

தனது மனைவியை குடும்பம் நடத்த வரும்படி அவர் அழைத்தார். அதற்கு ரோஜா மறுத்துவிட்டார். இதனால் மனவேதனையுடன் வீட்டுக்கு வந்த வேலு நேற்று முன்தினம் கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று அங்குள்ள கருவேல மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்