பொதுமக்களின் நடமாட்டதை கட்டுப்படுத்த கரூர் நகராட்சி பகுதியில் 60 இடங்களில் தடுப்புகள் அமைப்பு

பொதுமக்களின் நடமாட்டதை கட்டுப்படுத்த கரூர் நகராட்சி பகுதியில் 60 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-05-26 17:11 GMT
கரூர் 
கொரோனா ஊரடங்கு
கரூர் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை  கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையில்லாமல் ெவளியில் சுற்றித்திரிவதை தடுக்கும் வகையில் கரூர் நகரின் பல்வேறு முக்கிய சாலைகளில் போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்தும், வாகனத்தில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து அபராதம் விதித்தும், அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். 
மேலும் ஊரடங்கை தீவிரப்படுத்தும் வகையில் நகருக்குள் நுழையும் முக்கிய சாலைகள் மற்றும் முக்கிய வீதிகள் என நேற்று முன் தினம் கரூர் நகராட்சியில் 11 இடங்களில் நகராட்சி ஊழியர்கள் இரும்பு தடுப்புகள் மற்றும் கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைத்தனர்.
தடுப்புகள் அமைப்பு
இந்தநிலையில் நேற்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கட்டுப்படுத்த கரூர் நகராட்சிக்கு உட்பட்ட கரூர் மாரியம்மன் கோவில் தெரு, வாயக்கால் சந்து, பாலம்மாள்புரம், வெங்கமேடு, தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரோடு, அரசு கலைக்கல்லூரியில் இருந்து பொன்நகர் செல்லும்ரோடு, பீங்கா நகர்ரோடு, ராயனூர்  செல்லும் ரோடு உள்பட 60 இடங்களில் இரும்பு, மரக்கட்டைகள், மரக்கிளைகள், முட்செடிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
இதுகுறித்து கரூர் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்