ராசிபுரத்தில் அரசு ‘ஸ்டிக்கரை’ போலியாக ஒட்டியிருந்த கார் பறிமுதல்; காண்டிராக்டர் மீது வழக்கு

ராசிபுரத்தில் அரசு ‘ஸ்டிக்கரை’ போலியாக ஒட்டியிருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-05-26 18:31 GMT
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி (பொறுப்பு) தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ‘அரசு பணி, தாட்கோ பணியாளர்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து காரில் இருந்த நபரிடம் போலீசார் விசாரித்த போது, அவர் திருச்செங்கோடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் சரவணன் (40) என்பதும், அரசு ஸ்டிக்கரை போலியாக காரில் ஒட்டி வந்ததும் தெரிந்தது. மேலும், அவர் கொல்லிமலை நோக்கி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த காரை பறிமுதல் செய்த போலீசார், சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்