கொரோனா தடுப்பூசி போட கூடுதல் மையங்கள் வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட கூடுதல் மையங்கள் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-05-29 22:28 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட கூடுதல் மையங்கள் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தடுப்பூசிகள்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 27-ந் தேதி வரை 2 லட்சத்து 1,659 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர். ஈரோடு தந்தை பெரியார் அரசு தலைமை மருத்துவமனை உள்பட எந்த அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் இல்லை. பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு உள்ளது. 
தற்போது   45 வயதுக்கு மேற்பட்டவர்களை விட 18 வயது முதல்   44 வயதுக்கு உள்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் கூடுதலாக இருக்கின்றன.
ஈரோடு மாவட்ட அளவில் 27-ந் தேதி நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி டோஸ்கள் 2 ஆயிரத்து 900 மட்டுமே இருந்தது. 18 முதல் 44 வயது வரையானவர்களுக்கு 6 ஆயிரத்து 810 மட்டுமே இருந்தது. அதே நேரம் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவும் வேகத்தை பார்த்து அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள் தடுப்பூசிகள் போட ஆர்வமாக உள்ளனர்.
முகாம்
அவர்கள் தினமும் எங்கே தடுப்பூசி கிடைக்கிறது என்று அலைந்து திரிந்து தகவல்கள் சேகரிக்கிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடும் நிலை உள்ளது.
இதற்கிடையே முன்களப்பணியாளர்கள், பொதுமக்களுடன் அதிக தொடர்பில் இருக்கும் பணியாளர்கள் என்று முகாம்கள் அமைத்து தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. விசைத்தறி பணியாளர்களுக்கு முகாம் அமைத்து ஊசிகள் போட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்று அந்தந்த நிறுவனங்கள் சார்பில் அறிவிப்பு கொடுத்து இருப்பதால் தனியார் நிறுவன பணியாளர்கள் தடுப்பூசி போடும் இடங்களை தேடி வருகிறார்கள்.
நீண்ட வரிசை
பொதுவாக அரசு ஆஸ்பத்திரிகள் தெரிந்த அளவுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. எனவே எங்கே ஊசி போடுகிறார்கள் என்று தெரியாமல் தடுமாறுவதும், எங்காவது ஒரு இடத்தில் ஊசி போடும் விவரம் தெரிந்தால் அங்கே சென்று அனைவரும் கூடுவதும் அன்றாட காட்சிகளாக உள்ளன. இதன்படி நேற்று ஈரோடு மரப்பாலம் அருகே உள்ள முனிசிபல்காலனி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்கள் ஆதார் அட்டைகளுடன் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். இதுபோல் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். இதுவும் ஒரு வகையில் பரவலை ஏற்படுத்தக்கூடும்.
கூடுதல் மையங்கள்
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, “இந்த கொரோனாவுக்கு ஊரடங்கு எவ்வளவு முக்கியமோ அதுபோன்று தடுப்பூசியும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. எனவே ஈரோட்டில் தடுப்பூசி முகாம்கள் கூடுதலாக அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி தடுப்பூசி மருந்துகள் அதிக அளவில் கிடைக்கும் படி செய்ய வேண்டும். தடுப்பூசி போடும் பணியில் கூடுதலாக செவிலியர்கள் ஈடுபடுத்த வேண்டியதும் அவசியமாகும். ஒன்று அல்லது 2 செவிலியர்கள் மட்டுமே 100 பேருக்கும் மேலாக தடுப்பூசி போடும் பணியில் உள்ளதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதல் தடுப்பூசி மையங்கள் அமைத்து தட்டுப்பாடு இல்லாத வகையில் தடுப்பூசி இருப்பு வைக்க வேண்டும்’’ என்றார்கள்.

மேலும் செய்திகள்