வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை

திருப்பூர் மாநகரில் வாகனங்களில் மீன்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-05-30 12:39 GMT
திருப்பூர்
திருப்பூர் மாநகரில் வாகனங்களில் மீன்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மளிகை பொருட்கள்
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வாரம் முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் ஊரடங்கின் போது காய்கறி மற்றும் மளிகை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று குறையாத காரணத்தால் இந்த முழு ஊரடங்கில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் வார்டு தோறும் காய்கறிகளை வாகனங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இதுபோல் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய விருப்பம் உள்ளவர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று விற்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
வாகனங்களில் விற்பனை
அதன்படி திருப்பூர் மாநகரில் வாகனங்களில் காய்கறிகள் தினமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோல் தற்போது மீன்கள் மற்றும் மளிகை பொருட்களையும் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். மீன்கள் விற்பனைக்கு வருவதால் மீன் பிரியர்கள் பலரும் ஆர்வமாக மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள். பொதுமக்களும் வாகனங்களில் வருகிற புளி மற்றும் சாம்பார் பொடி, ரசப்பொடி, அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை பொதுமக்கள் வாங்கி வருகிறார்கள்.
ஏராளமானவர்கள் வாகனங்களில் பொருட்களை விற்பனை செய்து வருவதால், ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களுக்கு சிரமமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுபோல் மாவட்ட நிர்வாகம் அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-

மேலும் செய்திகள்