வீடு வீடாக சென்று மளிகை பொருட்களை விற்க 7 ஆயிரம் பேருக்கு அனுமதி மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மளிகை பொருட்களை விற்க 7 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்தார்.

Update: 2021-05-31 02:51 GMT
ஆலந்தூர்,

கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று காய்கறி, பழங்களுடன் மளிகை பொருட்களையும் விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் மளிகை பொருட்களை வாகனங்களில் வீடு வீடாக சென்று விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி பாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டு வியாபாரிகளுக்கு அனுமதி பாசை வழங்கினர்.

தீவிர துப்புரவு பணி

பின்னர் நந்தம்பாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் தீவிர துப்புரவு பணிகளையும அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி இருவரும் ஆய்வு செய்தனர்.

அப்போது தீவிர துப்புரவு பணியின்போது சேகரிக்கப்படும் குப்பைகளை உடனுக்க ுடன் அகற்றும்படி அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் மணப்பாக்கம் பகுதியில் அடையாறு ஆற்றில் படர்ந்து இருந்த ஆகாய தாமரைகள் அகற்றப்படும் பணியையும் அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி கூறியதாவது:-

7 ஆயிரம் பேருக்கு அனுமதி

பொதுமக்களுக்கு தடையில்லாமல் மளிகை பொருட்கள் கிடைக்க வாகனங்கள், தள்ளுவண்டிகளில் வீடு வீடாக சென்று வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டது. வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்ய கூடியவர்கள் மண்டல அலுவலகங்களில் மனு தந்து உரிய அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 7 ஆயிரம் பேருக்கு வீடு வீடாக சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்ய அனுமதி பாஸ் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. வியாபாரிகள் யாரும் கடைகளை திறக்க கூடாது. வாகனங்களில் சென்றுதான் விற்பனை செய்ய வேண்டும். குறைந்த வீடுகள் உள்ள பகுதிகளிலும் விற்பனை செய்யவேண்டும்.

குப்பைகள் அகற்றம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் நீண்ட காலமாக தேங்கி உள்ள குப்பைகள், கட்டிட கழிவுகள் அகற்றப்படும் பணி நடந்து வருகிறது. ஒரு நாளுக்கு 500-ல் இருந்து 800 டன் வரை குப்பைகள் அப்புறப்படுத்தப்படுகிறது. ஊரடங்கு காலமாக இருப்பதால் 10 நாளில் 5 ஆயிரம் டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் ராஜகோபால் சுக்ரா, தலைமை பொறியாளர் என்.மகேஷன், மண்டல அலுவலர் சீனிவாசன், செயற்பொறியாளர் ராஜசேகர், உதவி பொறியாளர் ராமமூர்த்தி, உதவி வருவாய் அலுவலர் மஞ்சுளா, முன்னாள் கவுன்சிலர் பி.குணாளன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்