டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி கிருஷ்ணகிரி அருகே பரிதாபம்

டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி கிருஷ்ணகிரி அருகே பரிதாபம்

Update: 2021-06-01 00:34 GMT
பர்கூர், ஜூன்.1-
கிருஷ்ணகிரி அருகே கியாஸ் டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். 
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வெல்டிங் பட்டறை
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா பொகலூர் அருகே உள்ள துரிஞ்சிதலைப்பட்டியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மகன் ரமேஷ் (வயது 35). இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வசித்து வந்தார். ரமேஷ் பெங்களூருவில் வெல்டிங் பட்டறை வைத்திருந்தார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ரமேஷ் தனது குடும்பத்தினருடன் ஆம்னி வேனில் குடியாத்தம் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று காலை அவர்கள் ஆம்னி வேனில் பெங்களூருவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். 
லாரி மீது வேன் மோதியது
ஆம்னி வேனை ரமேஷ் ஓட்டி வந்தார். அவருடன், அவரது மனைவி தீபா (30), மகன் நித்தீஷ் (1) மற்றும் உறவினர்கள் துரிஞ்சிதலைப்பட்டியை சேர்ந்த அஞ்சலி (34), வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கீழ்ஆலத்தூர் அருகே உள்ள கே. மோட்டூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி சரளா (35), அவர்களது குழந்தைகள் சாரிகா (9), ஓவியா (5) ஆகியோர் வந்தனர்.
நேற்று மதியம் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே சென்னை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி அருகே ஆம்னி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் கியாஸ் டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த சமயம் கண்இமைக்கும் நேரத்தில் டேங்கர் லாரியின் பின்புறம் ஆம்னி வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
5 பேர் பலி
இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த ரமேஷ், அவரது மனைவி தீபா, குழந்தை நித்தீஷ், உறவினர் அஞ்சலி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். வேனில் இருந்த சரளா மற்றும் சிறுமிகள் சாரிகா, ஓவியா ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்து சத்தம் ேபாட்டனர். இதைக் கேட்டு அங்கு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சரளா பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. சிறுமிகள் சாரிகா, ஓவியா ஆகியோருக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சோகம்
அதே போல விபத்து நடந்த இடத்திற்கு பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேல் தலைமையில் வீரர்கள் பழனி, கிருஷ்ணமூர்த்தி, பிரதாப், விமல் உள்ளிட்டோர் சென்றனர். அவர்கள் விபத்தில் பலியான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
ஆம்னி வேனை ஓட்டிய ரமேஷ் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்ததா? அல்லது வேறு எதுவும் காரணமா? என கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டேங்கர் லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=====

மேலும் செய்திகள்