ஊரடங்கை மீறிய 297 பேர் மீது போலீசார் வழக்கு

ஊரடங்கை மீறிய 297 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-06-02 18:29 GMT
கரூர்
வாகன சோதனை
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசர தேவைகளை தவிர்த்து வெளியிடங்களில் சுற்றித்திரியும் வாகனங்கள் ஆங்காங்கே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதோடு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
மது விற்ற 6 பேர் கைது
அந்தவகையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டதில், முககவசம் அணியாமல் வெளியிடங்களுக்கு வந்த 151 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமாக ரூ.30 ஆயிரத்து 200-ம், பொது இடங்கள் கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது சுமார் 11 வழக்குகள் பதியப்பட்டு அபராதமாக ரூ.5 ஆயிரத்து 500  வசூலிக்கப்பட்டது. 
அதேபோல, ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 125 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன. மேலும், மது பாட்டில்களை பதுக்கி விற்றதாக 4 வழக்குகள் பதியப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 30 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
குளித்தலை-நச்சலூர்
குளித்தலை, நச்சலூர், நெய்தலூர் பகுதிகளில் ஊரடங்கைமீறி தேவையின்றி சுற்றித்திரிந்த 13 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரேநாளில் 297 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்