புனே நகரில் அமலுக்கு வரவுள்ள தளர்வுகள் என்ன? புனே மாநகராட்சி விளக்கம்

புனே நகரில் அமலுக்கு வரவுள்ள தளர்வுகள் என்ன என்பது குறித்து மாநகராட்சி விளக்கம் அளித்து உள்ளது.

Update: 2021-06-07 10:49 GMT
ஓட்டல், மதுபானவிடுதி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அடிப்படையில் நகரங்கள் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் புனே, பிம்பிரி சிஞ்வட் மாநகராட்சி பகுதியில் பிரிவு 3-ல் இடம்பிடித்து உள்ளது. புனே மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பு சதவீதம் 6.11 ஆக உள்ளது. 27.47 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்று(திங்கள்) முதல் புனே மாநகராட்சி பகுதியில் அமலுக்கு வர உள்ள தளர்வுகள் விவரத்தை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:- ஓட்டல், உணவகங்கள், மதுபான விடுதிகள், உணவு வளாகங்கள் 50 
சதவீத வாடிக்கையாளர்களுடன் மாலை 4 மணி வரை திறந்து இருக்கலாம். இதேபோல மற்ற அனைத்து கடைகளும் மாலை 4 மணி வரை செயல்படலாம். இதில் அத்தியாவசிய கடைகள் வாரம் முழுவதும், அத்தியாவசியம் இல்லாத கடைகள் வார நாட்களில் மட்டும் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பஸ்களில் அனுமதி
இதேபோல பூங்காக்கள், விளையாட்டு மைதானம் போன்ற பொது இடங்கள் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறந்து இருக்கும். உடற்பயிற்சி கூடங்கள், சலூன், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை ஏ.சி. பயன்படுத்தாமல் மாலை 4 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.இதேபோல புனே நகரில் மாநகர பஸ்களில் 50 சதவீதம் பயணிகள் பயணம் செய்ய அனுமதி 
வழங்கப்பட்டுள்ளது.திருமணங்களில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 போ் வரையும் கலந்து கொள்ளலாம். இதேபோல அத்தியாவசிய காரணம் இல்லாமல் பொதுமக்கள் மாலை 5 மணிக்கு மேல் வெளியில் சுற்றக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே தளர்வுகள் 3-வது பிரிவில் இடம்பெற்றுள்ள பிம்பிரி சிஞ்வட் மாநகராட்சி பகுதியிலும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் செய்திகள்