ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை

தக்கலையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களை கட்டுப்படுத்த அதிரடியாக சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர்.

Update: 2021-06-10 17:48 GMT
பத்மநாபபுரம்:
தக்கலையில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களை கட்டுப்படுத்த அதிரடியாக சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். 
தளர்வை தவறாக...
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறி அவசியமின்றி வெளியே சுற்றி திரிபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து நூதன தண்டனைகளை கொடுத்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்திலும் ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றித் திரிபவர்களை போலீசார் கண்காணித்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்கிறார்கள். எனினும் சிலர் தேவையின்றி வெளியே சுற்றி வந்த வண்ணம் உள்ளனர்.
கொரோனா பரிசோதனை
இந்தநிலையில் பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் தக்கலை போலீசார் நேற்று திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
அப்போது, அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த 20 பேரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அங்கு தயாராக இருந்த சுகாதார பணியாளர்கள் கொரோனா பரிசோதனைக்காக அந்த 20 பேரிடமும் சளி மாதிரிகள் எடுத்தனர். இதை சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினர்.
இந்த சம்பவம் தக்கலையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மேலும் செய்திகள்