சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி 1,200-யை தொட்டது மேலும் 945 பேருக்கு தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,200-யை தொட்டது. மேலும் புதிதாக 945 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-10 21:09 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,200-யை தொட்டது. மேலும் புதிதாக 945 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 900-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 957 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 945 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 310 பேர், வீரபாண்டியில் 65 பேர், சேலம் ஒன்றியத்தில் 61 பேர், நங்கவள்ளியில் 46 பேர், சங்ககிரியில் 41 பேர், ஓமலூரில் 36 பேர், தலைவாசலில் 33 பேர், மகுடஞ்சாவடி, தாரமங்கலம், அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 31 பேர், வாழப்பாடியில் 29 பேர், பனமரத்துப்பட்டியில் 28 பேர், காடையாம்பட்டியில் 26 பேர், ஆத்தூரில் 21 பேர், எடப்பாடியில் 20 பேர், மேட்டூரில் 19 பேர், கொளத்தூர், கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், மேச்சேரியில் 10 பேர், கெங்கவல்லி, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், ஏற்காட்டில் 4 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.
10,168 பேருக்கு சிகிச்சை
சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 14 பேர், தர்மபுரியில் இருந்து வந்த 13 பேர், கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த 12 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 11 பேர், சென்னையில் இருந்து வந்த 8 பேர், திருவள்ளூரில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,141 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 10 ஆயிரத்து 168 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
23 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,200-யை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்