கோவில்பட்டியில் மகளிர் சுயஉதவிக்குழு தலைவிக்கு மிரட்டல்

கோவில்பட்டியில் கடன் தவணையை திருப்பி செலுத்தாததால் வீடு புகுந்து மகளிர் சுயஉதவிக்குழு தலைவியை மிரட்டிய நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-06-11 13:13 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கடன் தவணையை திருப்பி செலுத்தாததால் வீடு புகுந்து மகளிர் சுயஉதவிக்குழு தலைவியை மிரட்டிய நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மகளிர் குழு தலைவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பாலன் தெருவை சேர்ந்தவர் முனியசாமி மனைவி சித்ரா (வயது 44). இவர் கஸ்தூரி மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த குழுவில் 21 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் சித்ரா தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளார். மேலும் அவர் தவணைத்தொகையை வசூலித்து நிதி நிறுவனத்துக்கு செலுத்தி வந்தார். 
வீடு புகுந்து மிரட்டல்
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகளில் வேலை இல்லாததால் மகளிர் சுயஉதவிக்குழுவினரால் தவணைத்தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேர் சித்ராவின் வீட்டில் புகுந்து பணத்தை செலுத்தும்படி கூறி உள்ளனர்.
அதற்கு அவர், கொரோனா ஊரடங்கால் பணத்தை செலுத்த முடியவில்லை என்றும், பின்னர் தருவதாகவும் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த அவர்கள், பணம் கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வோம் என்று கூறி சித்ராவையும், சுயஉதவிக்குழு உறுப்பினர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
6 பேருக்கு வலைவீச்சு
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசில் சித்ரா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் விமல், கருப்பசாமி, பெரியசாமி, வீரக்குமார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர்கள் 6 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் கடன் மற்றும் வட்டியை கேட்டு மிரட்டும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் கடன் தவணைத்தொகையை திருப்பி செலுத்தாததால் வீடு புகுந்து மகளிர் குழு தலைவியை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டிய இச்சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்