டீக்கடைக்காரர் மீது லாரி மோதல்; பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூரில் டீக்கடைக்காரர் மீது லாரி மோதியதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-13 19:23 GMT
அரியலூர்:

லாரி மோதி படுகாயம்
அரியலூர் புறவழிச்சாலையில் டீக்கடை வைத்திருப்பவர் கணேசன்(வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு, அவருடைய கடையில் இருந்தபோது, அந்த வழியாக ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது அந்த பெண்ணின் வாகனம் பழுதாகி நின்றது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக சென்ற கணேசன், இருசக்கர வாகனத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் கணேசன் பலத்த காயம் அடைந்தார்.
சாலை மறியல்
இந்த சம்பவம் பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் கூடினர். மேலும், அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதற்கு, சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம் என்றும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சாலை மறியல் செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்து, போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்