தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது

தி.மு.க. தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-15 05:07 GMT
ஆலந்தூர்,

சென்னை கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை கலிங்கா காலனியில் வசித்து வருபவர் கிஷோர் கே.சாமி (வயது 41). இவர், சமூக வலைதளங்களான ‘யூடியூப்’ மற்றும் ‘டுவிட்டரில்’ தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார். சமீபகாலமாக அவர், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் குறித்தும், தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோர் குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளரான பம்மல் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (40) என்பவர், கிஷோர் கே.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கர் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சங்கர் நகர் போலீசார், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலகத்தை விளைவிக்கும் நோக்கத்தில் செயல்படுதல், சில சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத்தூண்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிஷோர் கே.சாமியை கைது செய்தனர். பின்னர் அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து செங்கல்பட்டில் உள்ள கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்