டாஸ்மாக் கடைகளில் காற்றில் பறக்கும் விதிமுறைகள்

தா.பழூர் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி போன்றவை கடைபிடிக்கப்படாமல் விதிமுறைகள் காற்றில் பறக்கின்றன. போலீசாரின் நடவடிக்கையை மீறி தஞ்சை மாவட்ட மதுப்பிரியர்களும் மது வாங்கிச்சென்றனர்.

Update: 2021-06-15 20:59 GMT
தா.பழூர்:

சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியில் தா.பழூரில் 2 டாஸ்மாக் கடைகளும், கோட்டியால் பாண்டி பஜாரில் ஒரு டாஸ்மாக் கடையும், கோடாலி கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடையும் உள்ளன. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், அரசு உத்தரவின்படி நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.
டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க அரசால் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தா.பழூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது இல்லை. இதனால் விதிமுறைகள் காற்றில் பறப்பதோடு, கொரோனா தொற்று பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. மேலும் தொற்று அதிகம் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
தஞ்சை மாவட்ட மதுப்பிரியர்கள்...
இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மதனத்தூர், நீலத்தநல்லூர் பாலம் வழியாக நடந்தும், கொள்ளிடம் ஆற்றில் இறங்கியும், போலீசாருக்கு போக்குக் காட்டிவிட்டு வயல்வெளி வழியாகவும் மதுப்பிரியர்கள் வந்து தா.பழூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி சென்றனர்.
அவர்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் கட்டுப்பாடுகளை மீறி, கட்டுக்கடங்காத தஞ்சை மாவட்ட மதுப்பிரியர்கள் தா.பழூர் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு வருவது நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்