சென்னையில் பயங்கரம்: நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-06-16 05:32 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 25). இவர் நேற்று இரவு சாப்பிட்டு முடித்து விட்டு வீட்டின் முன் அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் 3 நாட்டு வெடிகுண்டுகளை அவர் மீது வீசினார்கள்.

இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த சரத்குமாரை ஆத்திரம் அடங்காமல் 6 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இந்த நிலையில் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்டதும், அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றது.

இதையடுத்து பொதுமக்கள் வந்து பார்த்தபோது சரத்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்ததும் பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் யார்? முன்விரோதம் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்