கடற்கரையில் ஒதுங்கிய மர்ம பொருள்

கிருமாம்பாக்கம் அருகே கடற்கரையில் மர்மபொருள் கரை ஒதுங்கியது.

Update: 2021-06-16 16:55 GMT
பாகூர், ஜூன்.17-
கிருமாம்பாக்கம் அடுத்த மூ.புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கரை ஒதுங்கி கிடந்த மர்மபொருளை ஆய்வு செய்தனர். அந்த பொருள் மஞ்சள் நிறத்தில் கோபுர வடிவில் சுமார் 5 அடி உயரம் இருந்தது.
விசாரணையில் அது துறைமுக பகுதியில் கப்பல்கள் செல்லும் போது, வழி காட்டும் மிதவை என்பதும், கடலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கெமிக்கல் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இந்த மிதவை சாதனம், கடலுக்கு அடியில் நங்கூரமிடப்பட்டு இருக்கும். கடல் சீற்றத்தால், சங்கிலி அறுந்து அலையின் நீரோட்டத்தால், கரைக்கு அடித்து வரப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்