ஆன்லைனில் பணம் அனுப்பும்படி கூறி கடை ஊழியரிடம் நூதன மோசடி

சென்னை விருகம்பாக்கம், சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர், விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் கடை நடத்தி வருகிறார்.

Update: 2021-06-17 04:01 GMT
இங்கு வாடிக்கையாளர்களிடம் கமிஷன் அடிப்படையில் பணம் பெற்று, அவர்கள் கூறும் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து பணபரிமாற்றம் செய்யும் சேவையை செய்து வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த மர்ம வாலிபர், தான் கூறும் வங்கி கணக்கிற்கு ரூ.4 ஆயிரம் அனுப்பும்படி கூறினார். அதன்படி கடை ஊழியர், தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை வாடிக்கையாளரின் வங்கி கனக்குக்கு பரிமாற்றம் செய்தார். பின்னர் வாடிக்கையாளரிடம் கமிஷனுடன் சேர்த்து பணத்தை கேட்டபோது, அந்த நபர் பணத்தை கொடுக்காமல் தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயபிரகாஷ், விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். மர்மநபரின் உருவம் பதிவாகி இருந்த தனது கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசாரிடம் கொடுத்தார். அந்த நபர் இதேபோல் அருகில் உள்ள வளசரவாக்கத்திலும் ஒரு கடையில் இதுபோல் நூதன மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அதன்பேரில் போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்