குன்னூர் அருகே பேரிக்காய்களை சேதப்படுத்தும் வவ்வால்கள்

குன்னூர் அருகே பேரிக்காய்களை வவ்வால்கள் கடித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-06-22 16:39 GMT
குன்னூர்

குன்னூர் அருகே பேரிக்காய்களை வவ்வால்கள் கடித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பேரிக்காய்

நீலகிரி மாவட்டம் குளிர் பிரதேசமாக இருப்பதால் இங்கு பினம், பேரி, பீச் போன்ற ஆங்கில பழ வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் பேரிக்காய் உள்ளுர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

 பேரிக்காயில் வால்பேரி, சட்டிபேரி, முள்பேரி, சாம்பல்பேரி போன்ற 10-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. குன்னூர் பகுதியில் வெலிங்டன், ஓட்டுப்பட்டறை போன்ற இடங்களில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பேரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது.

பேரிக்காய் மரங்களை தேயிலை செடிகளுக்கு இடையில் ஊடுபயிராகவும், தோப்பாகவும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

வவ்வால்கள் கடித்து சேதம்

பேரிக்காய் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மகசூல் கொடுக்கும் தன்மையுடையது. இதன் சீசன் மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை இருக்கும். தற்போது சீசன் தொடங்கியுள்ளததால், மரங்களில் பேரக்காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் இரவு நேரங்களில் வவ்வால்கள் பேரிக்காய்களை கடித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஊரடங்கால் பேரிக்காய்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. 

இதற்கிடையில் மரங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பேரிக்காய்களை வவ்வால்கள் கடித்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்