எப்பாடுபட்டாவது ‘நீட்’ தேர்வில் விலக்கு பெற வேண்டும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது தி.மு.க. அரசின் கடமை

எப்பாடுபட்டாவது ‘நீட்’ தேர்வில் விலக்கு பெற வேண்டும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது தி.மு.க. அரசின் கடமை டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.

Update: 2021-06-30 11:21 GMT
சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்து விட்ட நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. இது முந்தைய ஆட்சியில் முயற்சி செய்யப்பட்டு வெற்றி பெறாத திட்டம் தான்.

கடந்த முறை எந்த புள்ளி விவரங்களும் இல்லாமல் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்த முறை புள்ளி விவரங்களைத் திரட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நீட் சவாலை அரசு எவ்வாறு முறியடிக்கும் என்பதே வினா?

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவது எளிதானது அல்ல என்பதை தி.மு.க.வும் நன்கு அறியும். ஆனாலும், நீட் தேர்வை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த தி.மு.க.வே, அத்தேர்வை ரத்து செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்தது.

அதனால், எப்பாடுபட்டாவது நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டியதும், அதன் மூலமாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதும் தி.மு.க. அரசின் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்