ஆண்டிப்பட்டி அருகே மாடியில் விளையாடிய குழந்தை தவறி விழுந்து பலி

ஆண்டிப்பட்டி அருகே மாடியில் விளையாடிய குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2021-07-02 17:07 GMT
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருத்தமலைப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது 1½ வயது ஆண் குழந்தை யோகேஸ்வரன். இவன் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் குடும்பத்தினருடன் விளையாடி கொண்டிருந்தான். 
படிக்கட்டு அருகே யோகேஸ்வரன் வந்தபோது, திடீரென்று நிலைதடுமாறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்தான். மேலும் படிக்கட்டின் பக்கவாட்டு கைப்பிடி சுவரும் இடிந்து குழந்தை மீது விழுந்தது. 
இதில் யோகேஸ்வரன் படுகாயம் அடைந்து மயங்கினான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த தியாகராஜன், தனது குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து தேனி க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறிவிழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்