தேவதானப்பட்டி அருகே மொபட் மீது லாரி மோதல்; தொழிலாளி பலி

தேவதானப்பட்டி அருகே மொபட் மீது லாரி மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்துபோனார்.

Update: 2021-07-02 17:10 GMT
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் சின்னமன்று (வயது 37). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது உறவினரை பார்ப்பதற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சின்னமன்று மொபட்டில் கெங்குவார்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல்-குமுளி பைபாஸ் சாலையில் புல்லாக்காபட்டி விலக்கு என்ற இடத்தில் அவர் வந்தபோது, பின்னால் கம்பத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற லாரி ஒன்று மொபட் மீது மோதியது. பின்னர் அந்த லாரி, எதிரே வந்த மினி லாரி மீது மோதி நின்றது. 
இந்த விபத்தில் மொபட்டில் வந்த சின்னமன்று படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். மேலும் மினி லாரி டிரைவரான சுக்கங்கால்பட்டியை சேர்ந்த ராமசாமி (44) என்பவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் கம்பத்தை சேர்ந்த குமாரை (33) கைது செய்தனர். 

மேலும் செய்திகள்