8 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில், மனநலம் பாதித்து சாலையில் சுற்றித்திரிந்த 8 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

Update: 2021-07-02 17:33 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில், மனநலம் பாதித்து சாலையில் சுற்றித்திரிந்த 8 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.
மன நலம் பாதித்தவர்கள்
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் ஒப்படைப்பு பணி நடந்தது. அதற்காக மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் போலீசார் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான இந்த குழு தன்னார்வலர்கள் உதவியுடன் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகரங்களிலும், திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய கோவில் பகுதிகளிலும் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 8 ேரை போலீசார் கண்டறிந்து அவர்களை மயிலாடுதுறை அழைத்து வந்தனர். 
பின்னர் மயிலாடுதுறை ரெயிலடி பகுதியில் ஒரு பள்ளியில் நடந்த கொரோனா நோய் கண்டறியும் முகாமில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் நேரில் சென்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
8 பேர் காப்பகத்தில் ஒப்படைப்பு
பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட 8 பேரும் சீர்காழியில் உள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர். அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்படுவதோடு, பராமரிக்கப்பட்டு வருவதாகவும், போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல மயிலாடுதுறை நகரில் சுற்றித்திரிந்த ஆதரவற்ற 60 வயது பெண் ஒருவரை அழைத்து சென்ற போலீசார், அவரை சோழம்பேட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். மயிலாடுதுறை மாவட்ட போலீசார் மேற்கொண்டு வரும் இந்த பணியை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்