மருந்து கம்பெனி ஊழியரை தாக்கி ரூ.1 லட்சம் பறிப்பு; போலீசில் புகார்

அரவக்குறிச்சி அருகே மருந்து கம்பெனி ஊழியரை தாக்கி ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-02 18:29 GMT
அரவக்குறிச்சி
மருந்து கம்பெனி ஊழியர்
கரூர் மணவாடியைச் சேர்ந்த சிதம்பரம் (வயது 47). இவர், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஒரு மருந்து கம்பெனியில் (பார்மசி) ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்துக்கடைகளில் மொத்தமாக மருந்துகளை கொடுத்து, அதற்காக பணத்தை வசூல் செய்து வந்துள்ளார். 
இந்தநிலையில் கடந்த 30-ந்தேதி தனது மொபட்டில் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, மார்க்கம்பட்டி பகுதிகளில் உள்ள மருந்து கடைகளுக்கு சென்று மருந்துகளை கொடுத்து, பணம் வசூல் செய்தார். பின்னர் அதே மொபட்டில் கரூருக்கு அரவக்குறிச்சி-கரூர் சாலையில் கரடிப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தார். 
ரூ.1 லட்சம் பறிப்பு
அப்போது சிதம்பரத்தின் மொபட்டை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் வழிமறித்தனர். பின்னர் சிதம்பரத்தை மொபட்டில் இருந்து கீழே தள்ளி தாக்கி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து சிதம்பரம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்