காரைக்கால் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

காரைக்கால் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து ரங்கசாமியுடன் இலங்கைக்கான துணை தூதர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-07-02 20:11 GMT
புதுச்சேரி, ஜூலை.3-
காரைக்கால் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து ரங்கசாமியுடன் இலங்கைக்கான துணை தூதர் ஆலோசனை நடத்தினார்.
கவர்னருடன் சந்திப்பு
இலங்கை நாட்டிற்கான துணை தூதர் வெங்கடேஷ்வரன் நேற்று புதுச்சேரி வந்தார். அவர் கவர்னர் மாளிகையில் மரியாதை நிமித்தமாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருநாட்டு நல்லுறவுகள், அரசியல் பண்பாட்டு தொடர்புகள் குறித்து பேசினார்.
புதுச்சேரியில் வாழ்ந்த பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர் ஆகியோர் குறித்தும், புதுச்சேரியின் சிறப்புகள் குறித்தும் துணை தூதரிடம் கவர்னர் விளக்கினார். புதுச்சேரி தூய்மையான நகரமாக இருப்பதாக தெரிவித்த துணை தூதர், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 
பயணிகள் கப்பல் போக்குவரத்து
இதனை தொடர்ந்து புதுவை சட்டசபை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை துணை தூதர் வெங்கடேஷ்வரன் சந்தித்து பேசினார். இது தொடர்பாக வெங்கடேஸ்வரனிடம் கேட்டபோது, காரைக்கால் - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
இதன்பின்னர் காரைக்கால் சென்ற வெங்கடேஸ்வரன், அங்கு மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மாவை சந்தித்து பேசினார். பின்னர் அங்குள்ள தனியார் துறைமுகத்துக்கு சென்று அவர் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்